ஏ.ஆர்.முருகதாஸ்: ‘தீனா’, ‘ரமணா’ போன்ற வெற்றி படங்களை இயக்கி தமிழின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரானார் ஏ.ஆர். முருகதாஸ். அதன் பின்னர் அவர் நடிகர் சூர்யாவுடன் கைகோர்த்து வித்தியாசமான கதைக்களத்தில் ‘கஜினி’ படத்தை இயக்கினார். இப்படம் கடந்த 2005ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. சூர்யாவுக்கும் இது ஒரு திருப்புமுனை படமாகவே அமைந்தது. இப்படத்தில் வரும் சூர்யா, அசின் அவர்களின் காதல் காட்சிகள் இரசிகர்களால் பெரிதும் இரசிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இந்தியில் இதே பெயரில் நடிகர் அமீர்கானை வைத்து இயக்கி கடந்த 2008ல் வெளியிட்டார். அங்கும் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
இதைத் தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸ் சூர்யாவுடன் இணைந்து வரலாற்று சயின்ஸ் பிக்ஷ்ன் படமான ‘7ஆம் அறிவு’ படத்தை இயக்கினார். இப்படம் கடந்த 2011ம் ஆண்டு வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதைத் தொடர்ந்து இவர் நடிகர் விஜய்யுடன் இணைந்து ‘துப்பாக்கி’, ‘கத்தி’, ‘சர்கார்’ போன்ற படங்களை இயக்கினார். இவை அனைத்தும் வெற்றிப்படங்களாகவே அமைந்தது. கடைசியாக அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ‘தர்பார்’ படத்தை இயக்கினார். கடந்த 2020ம் ஆண்டு வெளியான இப்படம் பார்வையாளர்களிடையே அவ்வளவாக வரவேற்பை பெறவில்லை.
இந்நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் நடிகர் சூர்யாவுடன் 11 வருடங்களுக்குப் பிறகு 3வது முறையாக மீண்டும் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதுவும் ‘கஜினி’ படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.