மாணவர்களுக்கு சிற்பி திட்டத்தை அறிமுகம் செய்தார் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின்.
சென்னையில் பெருகி வரும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த மாநகராட்சி காவல் துறை பலவித முன்னேர்பாடுகளை செய்து வருகிறது. மேலும், சிறார் குற்றங்களுக்கு தீர்வு காணும் வகையில் சென்னையில் 100 மாநகராட்சி பள்ளிகளில் ‘சிற்பி’ என்னும் புதிய திட்டத்தை சென்னை கலைவாணர் அரங்கில் முதல்வர் தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தின் மூலம் சிறார்களை ஓழுங்குப்படுத்தவும் அவர்களுக்கு நல்வழி காட்டவும் குற்ற செயல்களில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை நல்வழிப்படுத்தி அவர்களுக்கு தகுந்த வழிகாட்டல் மூலம் நல்ல சமூதாயத்தை உருவாக்க ஏற்படுத்தப்பட்ட திட்டமாக இத்திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்து உருவாக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக சென்னையில் உள்ள 100 மாநகராட்சி பள்ளிகளில் உள்ள 50 மாணவர்களை கொண்டு இத்திட்டம் செயல்பட உள்ளது. பள்ளிகளில் செயல்படும் தேசிய மாணவர் படை (என்.சி.சி.) போல் காவல் துறையினரின் நிகழ்ச்சிகளில் மாணவர்களை ஈடுபடுத்தும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 8-ம் வகுப்பு முதல், மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கென தனி சீருடையும் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன், மாணவர்களை சுற்றுலா அழைத்துச் செல்லுதல், புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களுக்கு அழைத்துச் சென்று அவர்களின் திறன்களை மேம்படுத்துதல், சமூகத்தில் பொறுப்புள்ளவர்களாக அவர்களை மாற்றும் வகையில், அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களுடன் இணைந்து சட்ட கல்வியறிவு பெறச் செய்தல் போன்றவையும் இத்திட்டத்தில் அடங்கும்.
இதுதவிர, காவல் கட்டுப்பாட்டு அறை அவசர எண், காவலன் செயலி, முதியோர் உதவி எண், காவல் கரங்கள் உள்ளிட்ட அவசரகால எண்கள் குறித்து மாணவர்களுக்கு அறிவூட்டுவதுடன், அவர்களைக் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இத்திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
போதை பொருட்கள் நடமாட்டத்தை தடுக்கவும் இத்திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு அதற்கான உரிய பயிற்சியை அளித்து அவர்களை நல்வழிப்படுத்தும் திட்டமாகவும் செயல்பட இருக்கிறது.