75 வது சுகந்திர தினத்தை முன்னிட்டு ஜூலை 15ம் தேதி முதல் 75 நாட்களுக்கு 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த கோவிட் 19 தற்போது இந்திய நாட்டிலும் மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. கடந்த 2019 ம் ஆண்டுகளில் சீனாவின் ஊகான் மாகணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா 2020 களில் அனைத்து நாடுகளையும் அச்சுறுத்தி பல மக்களின் உயிரை பறித்தது.
உலக நாடுகள் அனைத்திலும் தனிநபர் இடைவெளி, முகக் கவசம் அணிதல், சேனிடைசர் பயன்பாடு, ஊரடங்கு என பல கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து தடுப்பூசிகளை மேற்கொண்டவுடன் வெகுவாக குறைந்தது.

இந்தியாவிலும் இதே நிலைமைதான் அரசு செய்த அறிவிப்புகளை மக்கள் பயன்படுத்தி சமூக இடைவெளி, முகக்கவசம், சானிடைசர், தடுப்பூசி என பின்பற்றியதால் கொரோனாவின் தாக்கம் குறைந்து மக்கள் வெளியில் வழக்கம் போல தன் பணியை ஆற்றி வருகின்றனர்.
இந்நிலையில், புதிது புதிதாக திரிபு அடைந்து கொரோனா வைரஸ் பரவி வருகிறது. தற்போது இந்தியாவில் கொரோனா பரவல் என்பது மெல்ல அதிகரித்து காணப்படுகிறது. கொரோனா தொற்றில் இருந்து தற்காத்து கொள்ள முதலில் 2 தவணையாக தடுப்பூசி போடப்பட்டது. பின்னர் தேவைப்படுவோருக்கு பூஸ்டர் டோஸும் போடப்பட்டு வருகிறது.
தற்போது கோவிட் பாதிப்பு அதிகரித்துள்ளதால் மாநில அரசுகள் தடுப்பூசி போடும் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளன. இந்நிலையில், ‘18-59 வயதுக்குட்பட்டவர்கள் 75 நாள் சிறப்பு இயக்கத்தின் கீழ் அரசு தடுப்பூசி மையங்களில் இலவசமாக கொரோனா தடுப்பு பூஸ்டர் டோஸ் போடப்படும் என்று மத்திய அரசு தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஜூலை 15ம் தேதி தொடங்கி 75 நாள் பொதுமக்கள் இலவசமாக கொரோனா பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளலாம்.