மெட்டா: மெட்டா நிறுவனம் சமீபத்தில் 11 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்த நிலையில் தற்போது மீண்டும் ஆள்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. பேஸ்புக்கின் தாய் நிறுவனம் மெட்டா அடுத்த சில மாதங்களில் மேலும் பலரை பணிநீக்கம் செய்ய திட்டமிடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது கடந்த ஆண்டு திட்டமிடப்பட்ட 13 சதவீத பணி நீக்க நடவடிக்கையை முழுமைப்படுத்தும் என வால்ஸ்டீரிட் ஜனரல் தெரிவித்து இருக்கிறது. நான்கு மாதங்களுக்கு முன்புதான் மெட்டா நிறுவனம் 11 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.
அந்த வரிசையில் தற்போதைய தகவல் உண்மையாகும் பட்சத்தில் இரண்டாவது முறையாக பெரும்பாலானோரை பணிநீக்கம் செய்யும் முதலாவது பெரிய டெக் நிறுவனமாக இருக்கும். இதுபற்றிய அறிவிப்புகள் அடுத்த வாரத்தில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இந்த முறை பொறியியல் அல்லாத பிரிவுகளை சேர்ந்தவர்கள் பணிநீக்கம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பணிநீக்கம் மட்டுமின்றி மெட்டா நிறுவனம் சில திட்டங்கள் மற்றும் குழுக்களை நிறுத்தவும் முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது. இதுபற்றிய கேள்விக்கு மெட்டா நிறுவனம் இன்னும் பதில் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.