நவராத்திரி கொலுப்படி உணர்த்தும் தத்துவம்

0
9

நவராத்திரி: வீட்டில் கொலு வைப்பவர்கள் மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது என்று ஒற்றைப்படையில் கொலு பொம்மைகள் வைப்பது வழக்கம். அதற்கு மேல் பதினொன்று, பதின்மூன்று என்று பல படிகள் வைக்கும் வழக்கமும் உள்ளது. ஆனால் ஒன்பது படிக்கட்டுக்களில் கொலு வைப்பது மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது. அதன் பின்னால் ஒரு தத்துவமும் உள்ளது அதைக் காணலாம்.

முதல் படி

தொடக்கத்தில் நாம் எல்லோரும் ஓர் அறிவுள்ள செடி, கொடிகளாக அறிவு விரிவடையாத நிலையில் இருந்தோம். அதைக் குறிப்பதற்காக கீழே முதல் படியில் செடி கொடிகள், தாவரங்கள், பூங்காக்கள், விவசாய நிலங்கள் ஆகியவை வைக்கப்படுகின்றன.

இரண்டாம் படி

அதன் பிறகு இறைவன் அருளால் சற்றே அறிவு வளர்ச்சி பெற்று ஈரறிவு உள்ள நத்தை, சங்கு போன்றவைகளாக அடுத்தடுத்த பிறவியில் பிறக்கிறோம். அதைக் குறிப்பதற்காக சங்கு, நத்தை பொம்மைகள் இரண்டாம் படியில் வைக்கப்படுகின்றன.

மூன்றாம் படி

அதற்கு பிறகு, மேலும் அறிவு வளர்ச்சி பெற்று மூன்று அறிவு கொண்ட எறும்பாக அடுத்த பிறவிகளில் பிறக்கிறோம். அதைக் குறிக்கவே எறும்பு உள்ளிட்ட ஊர்ந்து செல்லும் பிராணிகளின் பொம்மைகள் மூன்றாம் படியில் வைக்கப்படுகின்றன.

நான்காம் படி

இறைவன் அருளால் மேலும் நாம் அறிவு வளர்ச்சி பெற்று நான்கு அறிவு உடைய நண்டு, வண்டு போன்ற உயிரினங்களாக பிறக்கிறோம். அதைக் குறிக்கவே நண்டு, வண்டு போன்றவற்றின் உருவங்கள் நான்காம் படியில் வைக்கப்படுகின்றன.

ஐந்தாம் படி

மேலும் நம் அறிவு விரிவடையவே ஐந்து அறிவுடைய பறைவகள், விலங்குகளாக நாம் பிறக்கின்றோம். அதனை குறிப்பிடவே ஐந்தாம் படியில் ஆயர்கள் ஆடு, மாடு மேய்ப்பதை சித்திரிக்கும் பொம்மைகள், மூன்று குரங்குகள் அமர்ந்திருக்கும் பொம்மை மற்றும் பறவைகளின் உருவங்கள் வைக்கப்படுகின்றன.

ஆறாம் படி

அதன் பிறகு இறைவன் நம் மீது கொண்ட கருணையினால் நாம் ஆறறிவு கொண்ட மனிதர்களாக பிறவி எடுக்கிறோம். அதை உணர்த்தவே ஆறாம் படியில் காவலாளிகள், மரப்பாச்சி பொம்மைகள், வியாபாரிகள், விவசாயிகள் என மனித உருவங்கள் வைக்கப்படுகின்றன.

ஏழாம் படி

மனிதப் பிறவி எடுத்த பின், இவ்வுலக சுகங்களில் ஈடுபடாமல் இறைவனை நோக்கிய பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்று உணர்த்தவே மனிதநிலையில் இருந்து இறை பக்தியால் மேல்நிலையை அடைந்த ஆழ்வார்கள், நாயன்மார்கள், ஆச்சாரியார்கள் உள்ளிட்டவர்களின் வடிவங்கள் அவரவர் வழக்கப்படி ஏழாம் படியில் வைக்கப்படுகின்றன.

எட்டாம் படி

எட்டாம் படியில், இறைவனுக்கும் மனிதர்களுக்கும் இடைப்பட்ட நிலையிலுள்ள தேவர்கள், நவக்கிரக தேவதைகள், அஷ்ட திக்பாலர்கள் உள்ளிட்டவர்களின் பொம்மைகள் வைக்கப்படுகின்றன. தேவலோக சுகங்களில் உள்ள ஆசையை கடந்தால்தான் அதற்கும் மேல்படியில் உள்ள இறைவனை நாம் அடைய முடியும் என்பதை உணர்த்தவே இப்படிக்கட்டு இறைவனுக்கும் மனிதனுக்கும் நடுவே வைக்கப்படுகிறது.

ஒன்பதாம் படி

மேல் படியான ஒன்பதாம் படியில் இறைவன்-இறைவியின் உருவங்கள் வைக்கப்படுகின்றன. ஓரறிவு கொண்ட புழுவாகவும், செடி கொடியாகவும் பிறந்து, அதன்பின் ஊர்வன, பறப்பன எனப் பல பிறவிகள் எடுத்து, அதன் பின் மனிதப்பிறவி எடுத்து இறைவனின் அருளால் நிறைவாக இறைவனை அடைகிறோம் என்பதை இந்த ஒன்பதாம் படி உணர்த்துகிறது.

கொலுவை வைக்க தொடங்கும் போது முதலில் ஒன்பதாம் படியில் அவரவர் வழக்கத்திற்கேற்ப விநாயகர், தும்பிக்கை ஆழ்வார் போன்ற பொம்மைகளை வைக்க தொடங்கி அதன்பின் மற்ற தெய்வங்களின் பொம்மைகளை வைத்து அதன்பின் கீழ்நோக்கி ஒவ்வொரு படியிலும் அந்தந்த படிகளுக்கேற்ற பொம்மைகளை வைக்க வேண்டும் என்ற மரபு உள்ளது. இப்படியாக ஒன்பது படிகளில் கொலு பொம்மைகள் வைத்து வழிபடுவது மிகச்சிறப்பானதாக கருதப்படுகிறது.

navarathiri golu padigal

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here