நயன்தாரா: நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளதாக இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். லேடி சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படும் நயன்தாரா தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். இவர் கடந்த ஜீன் 9ம் தேதி இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். கடந்த 2015ம் ஆண்டு நானும் ரவுடிதான் திரைப்படத்தில் நடித்த போது இருவருக்குமிடையே காதல் மலர்ந்தது. இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடித்திருந்த நிலையில் இப்படத்தை விக்னேஷ்சிவன் இயக்கியிருந்தார். இப்படத்திலிருந்து தொடர்ந்த இவர்களது காதல் 7 வருடங்களுக்கு பிறகு கடந்த ஜீன் மாதம் திருமணத்தில் முடிந்தது. இவர்களது திருமணம் மாமல்லபுரத்தில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து இருவரும் வெளிநாடுகளுக்கு ஹனிமூன் சென்று அதன் புகைப்படங்களை அவ்வப்போது இணையத்தில் பதிவிட்டு வந்தனர். அது இரசிகர்களிடையே வைரலாகி வந்தது. தற்போது விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் மற்றுமொரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் அவர் நயனுக்கும் தனக்கும் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் அவர், ‘நானும், நயனும் அப்பா, அம்மா ஆகிவிட்டோம். இரண்டு ஆண் குழந்தைகளால் நாங்கள் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறோம். எங்களுடைய பிரார்த்தனைகள், முன்னோர்களின் ஆசிர்வாதங்கள், நன்மைகள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து எங்களுக்கு ஆசிர்வதிக்கப்பட்ட இரண்டு குழந்தைகளின் வடிவில் கிடைத்துள்ளது. எங்களுடைய உலகம் மற்றும் உயிர் இரண்டிற்கும் உங்கள் அனைவருடைய ஆசிர்வாதங்களும் தேவை’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதை விக்னேஷ்சிவன் ட்விட்டரில் வெளியிட்ட சில நிமிடங்களில் பல ஆயிரக்கணக்கானோர் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் அவர்களது இரசிகர்களுக்கு இது ஒரு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது.