துபாய்: துபாயில் ‘கோயில்களின் நகரம்’ என்றழைக்கப்படும் ஜெபல் அலி கிராமத்தில் இந்திய கலைநயத்துடன் புதிதாக கட்டப்பட்டுள்ள இந்து கோயில் திறக்கப்பட்டுள்ளது. துபாயில் வசிக்கும் இந்து மதத்தினருக்காக இந்திய கலை நயத்துடன் கூடிய இந்து் கோயில் திறக்கப்பட்டுள்ளது. புதிதாக கட்டப்பட்டுள்ள இந்த கோயிலை ஐக்கிய அரபு அமீரகத்தின் சகிப்புத்தன்மை துறை அமைச்சர் ஷேக் நயான் பின் முபாரக் அல் நயான் நேற்று முன் தினம் திறந்து வைத்தார். இதில் துபாய்க்கான இந்திய தூதர் சஞ்சய் சுதிர் கலந்து கொண்டார். கோயில் திறப்புக்காக ஐக்கிய அரபு அமீரக அரசுக்கு இந்திய தூதரகம் அதன் அதிகாரப்பூர்வ டிவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளது. ஜெபல் அலி கிராமத்தில் ஏற்கனவே 7 கிறிஸ்தவ தேவாலயங்களும், குருத்வாரா ஒன்றும் உள்ளது. தற்போது கூடுதலாக ஒரு இந்து கோயிலும் திறக்கப்பட்டுள்ளது. கோயில் திறப்பு விழாவின் போது ‘ஓம் சாந்தி ஓம்’ என்ற வேத மந்திரம் ஒலிக்கப்பட்டது. விழாவிற்கு வருகை புரிந்தவர்களை இசைக்கலைஞர்கள் மேள தாளம் முழங்க வரவேற்றனர்.
இந்து கோயிலின் சிறப்பம்சங்கள்.
70,000 சதுரடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள கோயிலின் கோபுரங்கள் வெண்கலத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளன. கோயிலின் உட்புறத்தில் 16 தெய்வங்கள் இடம் பெற்றுள்ளன.
வெள்ளை பளிங்குக் கற்களால் கட்டப்பட்டுள்ள கோயிலின் தூண்கள், முகப்பு பகுதி, மற்றும் திரைகள் இந்திய மற்றும் அரபு முறைப்படி வடிவமைக்கப்பட்டுள்ளன.
பிரார்த்தனை மண்டபத்தில் இளம் சிவப்பு தாமரை முப்பரிமாண வடிவில் அமைக்கப்பட்டு அதைச் சுற்றி ஏராளமான மணிகள் தொங்கவிடப்பட்டுள்ளன.
தினசரி 1000 முதல் 1200 பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் கியூஆர் குறியீடூ அடிப்படையில் முன்பதிவு முறை செயல்படுத்தப்பட்டுள்ளது.
தரிசனத்திற்காக கோயில் நடை காலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.