புதுச்சேரியில் பிரதமர் திறந்துவைத்து 6 மாதங்களுக்குப் பிறகு மாணவர் பயன்பாட்டுக்கு வந்த காமராஜர் மணி மண்டபம்.
இரண்டு முறை அடிக்கல் நாட்டப்பட்டு, 15 ஆண்டுகள் கட்டுமானப் பணிக்கு பிறகு பிரதமர் மோடி திறந்து வைத்து ஆறு மாதங்களுக்கு பிறகு காமராஜர் மணி மண்டபம் புதுச்சேரியில் மாணவர் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. சென்டாக் மாணவர் சேர்க்கை, நூலகம், யூபிஎஸ்சி உட்பட இளையோருக்கான பல நிகழ்வுகள் இங்கு நடத்தப்படவுள்ளது.
புதுச்சேரியில் கடந்த 2007-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் முதல்வராக ரங்கசாமி இருந்தபோது கருவடிக்குப்பம் சித்தானந்தா கோயில் அருகே ரூ.14 கோடியில் 3.75 ஏக்கரில் காமராஜருக்கு மணிமண்டபம் அமைக்க அடிக்கல் நாட்டினார்.

இதனையடுத்து 2009-ம் ஆண்டு நிதி நெருக்கடி காரணமாக இந்தப் பணி நிறுத்தப்பட்டது. தொடர்ந்து 2014-ம் ஆண்டு ஹட்கோ கடனுதவியில் மீண்டும் கட்டுமான பணி தொடங்கியது. அப்போது முதல்வராக இருந்த ரங்கசாமி 2-வது முறையாக காமராஜர் மணிமண்டபத்திற்கு அடிக்கடி நாட்டினார்.
இந்த மணிமண்டபத்தில் யூபிஎஸ்சி பயிற்சி மையம், உலகத் தரம் வாய்ந்த நூலகம், 130 பேர் அமரக் கூடிய ஆடிட்டோரியம், 4417 சதுர அடி தரைத்தளம், காமராஜர் சிலை, அவரது வாழ்க்கை வரலாற்று புகைப்பட கண்காட்சி, உள்ளிட்டவை அமைக்க முடிவு எடுக்கப்பட்டு பணிகள் நடந்தன.
ரூ.23 கோடியில் கட்டப்பட்டுள்ள காமராஜர் மணி மண்டபத்தை 14 ஆண்டுக்கு பின் பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் டெல்லியிலிருந்து ஆறு மாதங்கள் முன்பு திறந்து வைத்தார். அதன்பிறகு மண்டபம் பயன்படுத்தப்படாமல் இருந்தது.
இ்ந்நிலையில், நேற்று காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு கருவடிக்குப்பத்தில் உள்ள காமராஜர் மணி மண்டபம் திறக்கப்பட்டது.