புஷ்பா 2: அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில், சுனில் உள்பட பலர் நடித்து வெளியான ‘புஷ்பா’ படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கியது. இந்நிலையில் சில காரணங்களால் படப்பிடிப்பு திடீரென நிறுத்தப்பட்டது. இதற்கு சரியான லொகேஷன் அமையாததுதான காரணம் என்று கூறப்பட்டது. இந்நிலையில் படப்பிடிப்பை நிறுத்திவிட்டு இயக்குனர் சுகுமார் லொகேஷன் பார்க்க தனது உதவி இயக்குனர்களுடன் பல இடங்களுக்கு சென்றார். இதில் தாய்லாந்தில் உள்ள காடுகளில் படப்பிடிப்பு நடத்தினால் சரியாக இருக்கும் என்று அவருக்கு தோன்றியது. அந்த லொகேஷனை வீடியோவாக எடுத்து அல்லு அர்ஜுனுக்கும் அனுப்பினார். அவருக்கும் அந்த லொகேஷன் திருப்தியை தந்தது. இதையடுத்து அங்கு படப்பிடிப்பு நடத்த அனுமதி கோரப்பட்டுள்ளது.
அனுமதி கிடைத்ததும் தாய்லாந்தில் படப்பிடிப்பு நடத்தப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதற்காக அல்லு அர்ஜுன், பஹத் பாசில் மற்றும் துணை நடிகர்கள் சிலர் தாய்லாந்துக்கு படக்குழுவுடன் செல்ல தயாராகியுள்ளனர். இந்த படத்தை அடுத்த ஆண்டு இறுதியில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். அதே சமயம் படப்பிடிப்பு தாமதமானதால் 2024ல் திரையிடவும் யோசித்து வருகிறார்கள்.