அவ்வை நடராஜன்: திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு எனும் ஊரில் ஒளவை துரைசாமி மற்றும் லோகாம்பாள் தம்பதியனருக்கு 1936ம் ஆண்டு மகனாக பிறந்தவர் அவ்வை நடராஜன். மதுரையிலுள்ள தியாகராசர் கல்லூரி், தஞ்சாவூரிலுள்ள மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி ஆகியவற்றில் தமிழ் விரிவுரையாளராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர் அவ்வை நடராஜன். டெல்லியிலுள்ள அகில இந்திய வானொலி நிலையத்தில் செய்தி வாசிப்பாளராகவும், அறிவிப்பாளராகவும் அவ்வை நடராஜன் பணியாற்றியுள்ளார். 1992 முதல் 1995 வரை தஞ்சை தமிழ் பல்கல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும், செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் துணைத்தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.
தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்திற்கான அவரது பங்களிப்புகளை கெளரவிக்கும் விதமாக கடந்த 2011ம் ஆண்டு இந்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி சிறப்பித்தது. உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த அவ்வை நடராஜன் அவர்கள் நேற்று இரவு காலமானார். இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக அவரது உடல் அண்ணாநகர் இரண்டாவது பிரதான சாலையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. நடராஜன் அவர்களின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று நேரில் அஞ்சலி செலுத்த உள்ளார்.